அணு ஏவுகணை சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அணு ஆயுத திட்டங்களை நீண்டகாலமாக கண்காணித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஹான்ஸ் கிறிஸ்டென்சென் தெரிவித்துள்ளார்.
செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து இது குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
சீனாவின் ஏவுகணை பயிற்சிக்கான கட்டுமானப் பகுதிகளில் அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்ததில் அந்த நாடு புதிய அணு ஏவுகணைகளை நிலத்தடி குழிகளில் இருந்து ஏவுவதற்கான திறனை வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளாக அவர் கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக அமெரிக்காவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள ஏதுவாகவே சீனா அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனா அணு ஆயுதங்களை நவீனமயப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி அமெரிக்காவும் அடுத்த இருபது ஆண்டுகளில் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் செலவில் புதிதாக கட்டமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், இரண்டு நாடுகளுமே அணு ஆயுத பலம் பொருந்தியவை என்பதால் அணு ஆயுத மோதலை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் அணு ஆயுத விவகாரம் தொடர்பில் கண்காணித்துவரும் ஹான்ஸ் கிறிஸ்டென்சென் கூறியுள்ளார்.